Monday, July 8, 2024
Home » அதானி துறைமுகத்தை எதிர்த்து 4வது நாட்கள் நடத்திய மீனவர்கள் போராட்டம் வாபஸ் : சுமூக முடிவு எடுக்கப்படும் என கலெக்டர் எழுத்து மூலமாக உறுதி

அதானி துறைமுகத்தை எதிர்த்து 4வது நாட்கள் நடத்திய மீனவர்கள் போராட்டம் வாபஸ் : சுமூக முடிவு எடுக்கப்படும் என கலெக்டர் எழுத்து மூலமாக உறுதி

by kannappan

சென்னை: சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் எல்-டி கப்பல் கட்டும் தளம், அதானி துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. கடந்த 2008ம் ஆண்டு வங்ககடலோரத்தில் தொழிற்சாலைகள் அமைப்பதால் வாழ்வாதாரம் பாதிப்பதாக பழவேற்காடு மீனவர்கள் போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து, 1750 மீனவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதில், முதற்கட்டமாக 250 பேருக்கு வேலை வழங்கி கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். அறிவிக்கப்பட்ட அனைவருக்கும் வேலைவாய்ப்பு, பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள்  நேற்றுமுன்தினம் காட்டுப்பள்ளியில் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதனை தொடந்து, பழவேற்காடு, லைட்ஹவுஸ், தாங்கல் பெரும்பலம், கோட்டைக்குப்பம் ஆகிய நான்கு ஊராட்சிகளை சேர்ந்த மீனவர்கள் ஒட்டுமொத்தமாக நேற்று முன்தினம் மீன்பிடி தொழிலுக்குச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். காட்டுப்பள்ளியில் உள்ள எல்அண்ட்டி கப்பல் கட்டும் தளம், அதானி துறைமுகம் அருகே 500க்கும் மேற்பட்ட பழவேற்காடு மீனவ கூட்டமைப்பை சேர்ந்தோர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருவபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வேலைவாய்ப்பு அளிப்பதாக உறுதியளித்த எஞ்சிய ஆயிரத்து 500 பேருக்கும் வேலை வழங்க வேண்டும், அதானி துறைமுக விரிவாக்க திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும், பழவேற்காட்டில் இருந்து காமராஜர் துறைமுகம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சுமார் 2மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் காவல்துறையினர், வருவாய்த்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட மறுத்ததால் மீஞ்சூர் போலீசார் 200க்கும் மேற்பட்ட மீனவர்களை கைது செய்தனர். அவர்களை, மீஞ்சூர் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீசார் விடுவித்தனர்.2வது நாளாக கடல்வழியாக  படகு மூலம் சென்று  அதானி துறைமுகத்தை முற்றுகையிட்டு கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தை நடத்தினர். இந்நிலையில், வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி பழவேற்காடு பகுதியில் 3வது நாளாக கடல் மார்க்கமாக மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று 4வது நாள் மீனவ கிராமத்தினர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பின் ஜான் வர்கீஸ், பொன்னேரி தொகுதி எம்எல்ஏ.துரை சந்திரசேகர் ஆகியோர் சமரச பேச்சு வார்த்தை தொடர்ந்தனர்.இதில், இரவு 7.40.மணி அளவில் மீனவ கிராம நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. வரும் திங்கட்கிழமை அதானி துறைமுகம் .எல்என்டி நிறுவனம். கப்பல் கட்டும் தளம் ஆகிய கம்பெனிகளின் நிர்வாகிகளுடன் கலந்து பேசி சுமூக முடிவு எடுக்கப்படும் என எழுத்து மூலமாக மாவட்ட கலெக்டர் உறுதி அளித்ததின் பேரில் மீனவ மக்கள் கலைந்து சென்றனர் ….

You may also like

Leave a Comment

five × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi