சென்னை: தமிழகத்தை சேர்ந்தவரை துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என தமிழக கவர்னருக்கு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. அதில், கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் முதன்மை மற்றும் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனமாக விளங்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு, தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நேர்மை மற்றும் பன்முக திறன் வாய்ந்த ஒருவரை துணைவேந்தராக நியமிக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழக (தற்போதைய அல்லது கடந்த) பேராசிரிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதாக இருந்தால், சம்பந்தப்பட்ட கல்வியாளர்கள் குறித்து விரிவான ஆய்வு நடத்தி தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும், துணைவேந்தராக விண்ணப்பதவர்களின் பட்டியல் மற்றும் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்ட 10 விண்ணப்பதாரர்களின் பட்டியல் ரகசியமாக வைக்கப்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது. மாநிலத்தில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்களில் பெயர் பட்டியல்கள் வெளியிடப்படுகின்றன. எனவே நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம். அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஒரு சிறந்த கல்வியாளர் நியமிக்கப்படுவார் என்று நம்புகிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது….