சிதம்பரம், செப். 25: அண்ணாமலை நகர் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார். சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர் சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் எஸ்பி ராஜாராம் உத்தரவின் பேரில், சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் அறிவுறுத்தலின் பேரில், அண்ணாமலை நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேஷ், கஜேந்திரன் மற்றும் போலீசார் மணிகண்டன், தர் ஆகியோர் நேற்று காலை ராஜேந்திரன் சிலை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அண்ணாமலை பல்கலைகழகம் நோக்கி பைக்கில் வந்த நபரை நிறுத்தி சோதனை நடத்தியதில், புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து, மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியை சேர்ந்த கலியமூர்த்தி(50) என்வரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து அண்ணாமலை நகர் பகுதிகளிலும், சிதம்பரம் பகுதிகளிலும் விற்பனை செய்வதற்காக மூட்டையில் வைத்திருந்த புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் புகையிலை பொருட்களை கடைகளில் விற்பனை செய்ததில் கிடைத்த ரூ.5,05000 பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் விற்பனை செய்த அண்ணாமலை நகர் அருகே சிவபுரி சாலையில் மளிகை கடை வைத்திருந்த ரங்கன் மகள் பெண்ணழகி(38) என்பவரின் கடையிலிருந்து 100 பாக்கெட் புகையிலை பாக்கெட்டுகளும், வேளக்குடியை சேர்ந்த அண்ணாதுரை(52) என்பவரது மளிகை கடையில் இருந்து 100 பாக்கெட் புகையிலை பாக்கெட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்து, பெண்ணழகி, அண்ணாதுரை ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் சிதம்பரம் ஓமக்குளம் அருகே கலியமூர்த்தியின் சகோதரர் செல்வராஜின் வீட்டில் இருந்து சுமார் 40 கிலோ எடையுள்ள ரூ.1,28,000 மதிப்புள்ள புகையிலை பொருட்களையும் போலீசார் கைப்பற்றி தலைமறைவான செல்வராஜை தேடி வருகின்றனர்.