Saturday, July 6, 2024
Home » அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் சோகம்; பைக் மீது லாரி மோதியதில் காதல் ஜோடி பலி: லாரி டிரைவர் கைது

அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் சோகம்; பைக் மீது லாரி மோதியதில் காதல் ஜோடி பலி: லாரி டிரைவர் கைது

by kannappan

சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் பாபிலோனா (23). இன்ஜினியரான இவர், கிண்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது உறவினர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பிரசாத் (33). குன்றத்தூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் டிசைனிங் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். இருவரும் உறவினர்கள் என்பதால் நெருங்கி பழகி வந்தனர். நாளடைவில், இப்பழக்கம் காதலாக மாறியது. காதலுக்கு இருவரது பெற்றோரும் பச்சைக்கொடி காட்டியுள்ளனர். மேலும்,  முறைப்படி அடுத்த மாதம் திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்தனர். இதையடுத்து, மண்டபம் பார்த்தல், ஆடை மற்றும் நகைகள் வாங்குதல் என திருமண  ஏற்பாடுகளை இரு வீட்டாரும் மகிழ்ச்சியாய் செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அண்ணாநகரில் உள்ள தனியார் மாலில் இளம்ஜோடிகளான பிரசாத்தும், பாபிலோனாவும் சினிமா பார்த்து விட்டு  பைக்கில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 1.30 மணியளவில் அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே வந்தனர். அப்போது, கும்மிடிப்பூண்டியில் இருந்து  இரும்புகளை ஏற்றிக் கொண்டு, சென்னை  தேனாம்பேட்டை நோக்கி வந்த  லாரி, கண் இமைக்கும் நேரத்தில் பைக் மீது வேகமாக மோதியது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த பாபிலோனாவும் பிரசாத்தும் லாரி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். இதை பார்த்த லாரி டிரைவர் அங்கேயே லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓட முயன்றார். ஆனால், அவரை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர், அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில்,   சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.   புகாரின்பேரில் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் பொன்னன் (42) என்பவரை கைது செய்தனர். இதுதொடர்பாக, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இத்துயர சம்பவத்தை அறிந்ததும் மணமக்கள் வீட்டாரும் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர். இச்சம்பவம், அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது….

You may also like

Leave a Comment

19 + eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi