கொல்கத்தா: கொல்கத்தாவில் நடந்த திரிணாமுல் காங்கிரஸ் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பேசியதாவது: பாஜவை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் வரவேண்டும். பாஜவை எதிர்க்காமல் காங்கிரஸ் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறது. காங்கிரசின் ஆணவத்தால் ஏற்பட்ட தோல்விக்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. தேவைப்பட்டால் தனி ஆளாக பாஜவை எதிர்ப்பேன். பாஜ.வை தோற்கடிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். வரும் மக்களவை தேர்தலில் அனைத்து மாநில கட்சிகளும் ஓர் அணியில் நின்று பாஜவை வீழ்த்த வேண்டும். ஒன்றிய பட்ஜெட்டில் மக்களை ஏமாற்ற பல்வேறு பொய்யான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் எதிர்காலத்தோடு 2 பேர் விளையாடுகின்றனர். நாட்டு மக்கள் வேலை, உணவு ஆகியவைதான் வேண்டும் என்கின்றனர், வைர நகைகள் அல்ல. பத்ம பூஷண் விருது வழங்குவதும் அரசியலாக்கப்பட்டுள்ளது. பாஜ.வுக்கு எதிராக பேசினால் உங்களை மிரட்டுவார்கள், பெகாசஸ் செயலியை பயன்படுத்தி செல்போன்களை ஒட்டு கேட்பார்கள் என்றார்.* கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அமைப்பு தேர்தல் 5 ஆண்டுகளுக்கு பின் நேற்று நடந்தது. இதில், கட்சியின் தலைவராக மம்தா பானர்ஜி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.* மம்தாவுக்கு மும்பை கோர்ட் சம்மன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கடந்த ஆண்டு டிசம்பரில் சிவசனோ மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க மும்பை வந்தார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் தேசிய கீதம் பாடும்போது பார்வையாளர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் 2015ம் ஆண்டு உத்தரவை அப்போது மீறிவிட்டார் என மும்பை பாஜ நிர்வாகி விவேகானந்த் குப்தா தெற்கு மும்பை மஜ்காவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி, விசாரணைக்காக நீதிமன்றத்தில் மார்ச் 2ம் தேதி மம்தா ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்….