திருவாரூர், அக்.4: திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் ரயில் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. ஆண்டுதோறும் அக்டோபர் 2ந் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு இந்திய ரயில்வே துறையால் தூய்மை இந்தியா திட்டம் கடைபிடிக்கப்படுகிறது. இதன் மூலம் ரயில் வளாகம், நடைமேடைகள் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். அதன்படி, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் வழிகாட்டுதலின் படி, திருவாரூர் மாவட்ட ரயில் பயணிகள் நல சங்கமும், அடியக்கமங்கலம் அரசினர் மேல்நிலைப்பள்ளி நாட்டு நல பணி திட்ட மாணவர்களும் இணைந்து அடியக்கமங்கலம் ரயில் நிலைய வளாகத்தை நேற்று தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டனர்.
இந்த பணியில் திருச்சி ரயில்வே கோட்ட வணிக உதவி மேலாளர் மஞ்சுசந்திரன் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். இதில் ரயில் பயணிகள் நலச் சங்க பொதுச் செயலாளர் பாஸ்கரன், திருவாரூர் ரயில் சந்திப்பு மேலாளர் ரவி, ஆசிரியர் நடராஜன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பாக்கியராஜ் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினர். நாட்டு நல பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் தமிழ்காவலன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ரயில் நிலைய அலுவலர்கள் உதயசுகுமாரன், குரு ஆகியோர் செய்திருந்தனர்.