தேனி, ஜன. 9: பெரியகுளம் அருகே அழகர்நாயக்கன்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதி செய்து தரக்கேட்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் அழகர்நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த கணேஷ்பாபு என்பவர் கோரிக்கை மனுவை கலெக்டர் ஷஜீவனாவிடம் அளித்தார். இம்மனுவில், அழகர்நாயக்கன்பட்டியில் உள்ள பொதுக்கழீப்பறை போதிய பராமரிப்பில்லாமலும், தண்ணீர் வசதியில்லாமலும் இருப்பதால் பொதுமக்கள் பொதுவெளிச்சாலையை திறந்த வெளிக்கழிப்பிடமாக்கி வருகின்றனர்.
எனவே, அழகர்நாயக்கன்பட்டியில் கழிப்பறையில் தண்ணீர்குழாய் வசதி செய்வதுடன், சாலைவசதி, சாக்கடைவசதி, பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், இக்கிராமத்தில் அண்ணாமறுமலர்ச்சி திட்ட நூலகம் உள்ளது. இதனை தரம்உயர்த்தும் வகையில் அனைத்து நாளிதழ்கள், மாணவர்களுக்கான போட்டித்தேர்வுகளுக்கு தேவையான நூல்கள், கனிணிகருவிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவில் வலியுறுத்தி உள்ளார்.