திருவொற்றியூர்: திருவொற்றியூர் தொகுதி திமுக வேட்பாளர் கே.பி.சங்கர், எண்ணூர் 3வது வார்டுக்குட்பட்ட பர்மா நகர், நேதாஜி நகர், காசி கோயில் குப்பம், சுனாமி குடியிருப்பு போன்ற பகுதிகளில் நேற்று திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு பிரசாரம் செய்தார். அப்போது, வழிநெடுகிலும் பொதுமக்கள் ஆங்காங்கே மலர்தூவி உற்சாகமாக வரவேற்றனர். அப்போது, அவர் பேசுகையில், ‘கடந்த 2007ம் ஆண்டு திமுக ஆட்சியில்தான் திருவொற்றியூர் பகுதியில் பல கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் அபிவிருத்தி திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. பொதுமக்களின் நீண்டகால கனவான மாட்டு மந்தை ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று கலைஞரிடமும், மு.க.ஸ்டாலினிடமும் முன்னாள் திமுக அமைச்சர் கே.பி.பி.சாமி கோரிக்கை வைத்தார். அதன் அடிப்படையில் கட்டப்பட்ட மேம்பாலம் தான் இன்று மக்களின் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் 2011க்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுக, திருவொற்றியூர் மக்களுக்கு தேவையான எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. இந்த தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமைய உள்ளது. அதன்மூலம் திருவொற்றியூர் தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்வேன்,’ என்றார். …