Tuesday, September 17, 2024
Home » அடகு நகைகளை திரும்ப கேட்டதால் பழிவாங்க பள்ளி தோழன் மூலம் மாமியார் நகையை பறித்த மருமகள் கைது: தலைமறைவான வாலிபருக்கு போலீஸ் வலை

அடகு நகைகளை திரும்ப கேட்டதால் பழிவாங்க பள்ளி தோழன் மூலம் மாமியார் நகையை பறித்த மருமகள் கைது: தலைமறைவான வாலிபருக்கு போலீஸ் வலை

by kannappan

ஆவடி: அண்ணனூரில் அடகு வைத்த நகையை திரும்ப கேட்டதால், மாமியாரிடம் தங்கசங்கிலியை பறித்த மருமகளை போலீசார் கண்காணிப்பு கேமரா உதவியுடன் கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த அவரது பள்ளி தோழரை போலீசார் தேடி வருகின்றனர். ஆவடியை அடுத்த அண்ணனூர், தேவி நகர், சிவகாமி தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (35). இவர், பாடியில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லதா (எ) மோகனசுந்தரி (30). இவர், மளிகை கடை நடத்தி வருகிறார். இவர்களுடன் வினோத்குமாரின் தாயார் லலிதா (60) வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் வினோத்குமார் வீட்டிலிருந்து வேலைக்கு சென்றுள்ளார். இதன்பிறகு, லதாவும், மளிகை கடைக்கு சென்று விட்டார். வீட்டில் லலிதா மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது, சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் வீட்டுக்குள் திடீர்ரென புகுந்து அவரது கழுத்தில் கிடந்த 3 சவரன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு தப்பித்து சென்றுவிட்டார். இதுகுறித்து, மருமகள் லதா திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார், எஸ்.ஐ விஜயகுமார் ஆகியோர் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில், மாமியார் லலிதாவிடம் நகையை பறித்து சென்ற வாலிபருக்கு, மருமகள் லதா உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் லதாவை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது லதா கூறியதாவது, தனது தங்கையின் மருத்துவ செலவுக்கு பணம் தேவைபட்டது. இதனையடுத்து லதா, மாமியாரிடமிருந்து நகைகளை வாங்கி அடகு வைத்து மருத்துவ செலவுக்கு பணம் கொடுத்துள்ளார். இதன் பிறகு, லலிதா நகைகளை உடனடியாக மீட்டு தருமாறு லதாவுக்கு டார்ச்சர் கொடுத்து உள்ளார். இதனையடுத்து, லதாவும் பணத்தை புரட்டி அடகு கடையில் இருந்து நகையை மீட்டு லலிதாவிடம் கொடுத்துள்ளார். இதன் பிறகு, மாமியார் லலிதா மீது மருமகள் லதாவுக்கு ஆத்திரம் இருந்துள்ளது. மேலும், அவரை பழிவாங்க வேண்டும் என லதா திட்டம் தீட்டியுள்ளார். இதனால், அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த தனது பள்ளித்தோழரான கார்த்திகேயன் (32) உதவியை நாடியுள்ளார். தனது மாமியார் அணிந்திருந்த நகையை பறித்து தன்னிடம் தருமாறு கேட்டுள்ளார். இந்த சதி திட்டத்திற்கு  கார்த்திகேயனும் ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் லதா கார்த்திகேயனை மொபட்டில் அழைத்து கொண்டு வீட்டு அருகில் விட்டு விட்டு சென்றுள்ளார். அதன்பிறகு, கார்த்திகேயன் வீட்டுக்குள் சென்று லலிதாவின் கழுத்தில் இருந்து 3 சவரன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு தப்பித்து அங்கிருந்து ஓடி உள்ளார். அதன் பிறகு, அந்த தங்கச்சங்கிலியை லதாவிடம் கொடுத்து விட்டு சென்றதாக கூறினார். இதனையடுத்து, போலீசார் லதாவிடமிருந்து 3 சவரன் தங்கச்சங்கிலியை பறிமுதல் செய்தனர். மேலும், போலீசார் அவரை கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் நேற்று மாலை ஆஜர்படுத்தினர். நீதிபதியின் உத்தரவின் பேரில் போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் கார்த்திகேயனை தேடி வருகின்றனர்….

You may also like

Leave a Comment

five × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi