தேன்கனிக்கோட்டை, ஜன.6: தேன்கனிக்கோட்டை அருகே அடகு கடை ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பொதுமக்கள் வந்ததால் ஓட்டம் பிடித்தனர். இதனால், அரை கிலோ தங்க நகை தப்பியது.
தேன்கனிக்கோட்டை அருகே இருதுக்கோட்டையில் வசித்து வருபவர் கோவர்த்தனராம்(26). இவர், அப்பகுதியில் அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்றார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள், கடையின் ஷட்டரில் துளை போட்டு உள்ளே புகுந்தனர். பின்னர், லாக்கரை திருட முயன்றுள்ளனர். சத்தம் கேட்டு எழுந்த அப்பகுதி மக்கள் கோவர்த்தனராமிற்கு தகவல் தெரிவித்தனர். அவர் கடைக்கு வருவதற்குள் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியது. இதனால், லாக்கரில் இருந்த அரை கிலோ தங்க நகைகள் தப்பின. இதுகுறித்து, தேன்கனிக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடையில் இருந்த சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி அதில் மர்ம நபர்கள் வந்து சென்ற காட்சிகள் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.