அஞ்சுகிராமம், அக். 19: அஞ்சுகிராமம் அருகே உள்ள மகாராஜபுரத்தில் பொன் அன்பு தசராக் குழுவினர் 15 ஆண்டுகளாக காளி பூஜை நடத்தி வருகின்றனர். இங்கிருந்து வருடம் தோறும் குலசேகரபட்டினத்திற்கு தசரா குழுவினர் ஊர்வலம் செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தசரா ஊர்வலத்தில் சிறப்பு நிகழ்வாக அலங்காரத் தேரில் அம்மன் பவனி வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக தசரா குழுவினரின் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட அம்மன் தேர் அஞ்சுகிராமம் அழகிய விநாயகர் ஆலயத்திற்கு வந்தது. ஆலயத்தில் நிர்வாககுழு தலைவர் வாரியூர் நடராஜன், செயலாளர் காணிமடம் தங்கபாண்டி, பொருளாளர் மேட்டுக்குடி முருகன் ஆகியோர் முன்னிலையில் ஆலய குருக்கள் கணேச பட்டர் சிறப்பு பூஜைகள் நடத்தினார். அதைத்தொடர்ந்து அலங்கார அம்மன் தேர்ப்பவனியை பி.டி. செல்வகுமார் வேல் ஏந்தி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலப்பை மக்கள் இயக்க மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன், வர்த்தக அணி தலைவர் சந்திரன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய விவசாய அணி தலைவர் முருகன், ஆலய செயற்குழு உறுப்பினர்கள் வீடியோ குமார், சந்திரன், பரஞ்ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.