அஞ்சல் அலுவலகங்களில் தங்கப்பத்திரங்கள் விற்பனை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும், இன்று (19ம்தேதி) முதல் 23ம் தேதி வரை தங்கப்பத்திரங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராகவேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும், இன்று (19ம்தேதி) முதல் வரும் 23ம் தேதி வரை தங்கப்பத்திரங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இத்திட்டத்தில் ஒருவர் ஒரு கிராம் முதல் 4 ஆயிரம் கிராம் வரை வாங்கலாம். தங்கப்பத்திரத்தின் முதலீட்டு காலம் 8 ஆண்டுகளாகும். முதிர்வுறும் தேதியில், அன்றைய தேதியின் தங்கத்தின் மதிப்பிற்கு தங்கப்பத்திரங்களை பணமாக மாற்றிக்கொள்ளலாம்.

அதே வேளையில், தேவைப்பட்டால் 5 ஆண்டுகள் முடிந்த பிறகு தங்கப்பத்திரத்தைப் பணமாக மாற்றிக்கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலம் செய்யப்படும் முதலீட்டுக்கு, மத்திய ரிசர்வ வங்கி மூலமாக 2.5 சதவீத வட்டி கணக்கிட்டு, ஒவ்வொரு 6 மாதத்திற்கும் முதலீட்டாளர்களின் சேமிப்பு கணக்கில் சேர்க்கப்படும். இது முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாயாகும். இத்திட்டத்தில் சேர ஆதார் எண், பான் எண், வங்கிக்கணக்கு ஆகியவை அவசியம். தங்கப்பத்திரங்களை வைத்து பணம் தேவைப்படும் போது, வங்கிகளில் கடன் பெற்றுக்கொள்ளலாம். தங்கத்தை பத்திர வடிவில் வாங்குவதன் மூலம், செய்கூலி மற்றும் சேதாரம் செலுத்தாமல் தங்கத்தை சேமிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகலாம். எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

திருநின்றவூர் ஏரியில் ₹50 லட்சம் மதிப்பில் மதகுகளை சீரமைத்து, கால்வாய் சுத்தம் செய்யும் பணி தீவிரம்: நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி ஆர்எம்கே பள்ளி மாணவனுக்கு தங்கம்

கும்மிடிப்பூண்டி அருகே பயங்கரம்; ஓசியில் பொருள் கொடுக்காத ஆத்திரத்தில் மளிகைக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு