நெல்லை: அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர பல லட்சம் இளைஞர்கள் தன்னார்வத்துடன் பதிவு செய்துள்ளதாக நெல்லையில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல். முருகன் நேற்று நெல்லை வண்ணார்பேட்டை அரசு சுற்றுலா மாளிகையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாடு முழுவதும் 75வது சுதந்திர தின அமுத பெருவிழாவை கோலாகலமாக கொண்டாட பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து அனைத்து வீடுகளிலும் மூன்று நாட்கள் தேசியக் கொடி ஏற்ற அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்ற 75 தலைவர்களை தேர்வு செய்து அவர்கள் நினைவிடங்களுக்கு சென்று மாலையணிவித்து மரியாதை செலுத்தவும், அவர்களின் குறும்படங்களை ஒளிபரப்பவும், அவர்களது குடும்பத்தினரை கவுரப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நாளை 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை 3 தினங்கள் தேசியக் கொடியை வீடுகளில் ஏற்றி தேசப்பற்றை வெளிப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். நாட்டு மக்களிடம் தேச பக்தியை ஏற்படுத்த உரிய நடவடிக்கைகளை பா.ஜ. எடுத்துள்ளது. அக்னிபாத் திட்டத்திற்கு இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. பல லட்சம் இளைஞர்கள் தன்னார்வத்துடன் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்….