Sunday, June 30, 2024
Home » அக்குபிரஷர் ரோலர் எதற்காக?!

அக்குபிரஷர் ரோலர் எதற்காக?!

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர் சமீபத்தில் அதிகம் பேசப்படும் பொருளாக மாறியது அக்குபிரஷர் ரோலர். பார்க்கவே வித்தியாசமாக காட்சி தரும் அக்குபிரஷர் ரோலரின் பயன்பாடு என்னவென்று அக்குபங்சர் தெரபிஸ்ட் பரிமள செல்வியிடம் கேட்டோம்…‘‘அக்குபிரஷர் ரோலர் என்பது ஒரு சிறிய கருவி. இது நம் ஆரோக்கியத்தை காத்துக்கொள்ள பயன்படுத்தப்படுகிறது. நாற்காலியில் அமர்ந்துகொண்டு நம் பாதங்களுக்கு அடியில் இதை வைத்து அழுத்தம் கொடுத்து உருட்டும்போது நம் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. இவ்வகையான செயலால் நம் உடல் மற்றும் மனம் புத்துணர்வு பெறும். நம் உடலில் உள்ள உள்ளுறுப்புகளில் சக்தி ஓட்டப்பாதை நம் பாதங்களில் அமைந்துள்ளது. அதில் தேக்கம் ஏற்படும்போது உடல் பலவீனமாகிறது. அப்போது அந்த உறுப்புகளை மீண்டும் இயக்க இந்த கருவி கொண்டு அழுத்தம் கொடுக்கும்போது தேக்கம் கலைந்து சக்தி ஓட்டம் சீராக நடைபெறுகிறது. அக்குபிரஷர் முறை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பழக்கத்தில் இருந்திருக்கிறது. திபெத்திய லாமாக்கள்தான் இந்த முறையை பயன்படுத்தி இருப்பதாக வரலாறு கூறுகிறது. அந்த காலத்தில் ஆதி மனிதர்கள் கால்களுக்கு செருப்பு அணியாமல் வெற்று கால்களுடன்தான் நடந்தனர். அவர்கள் காடு, மேடு, பள்ளம், முள், புதர், புல் என பலவற்றை கடந்தனர். அவர்களின் பாதங்களில் உள்ள அக்குபிரஷர் புள்ளிகள் அவர்களை அறியாமலேயே கற்கள், முள், மண், கட்டை, பாறை முதலியவற்றால் அழுத்தமுற்றன. இதன் பயனாக அவர்களின் வலிகள் மறைந்திருக்கலாம். உள் உறுப்புகள் சக்தி பெற்றிருக்கலாம். இந்த ஆதிமனிதர்கள் இப்படியாகத்தான் தங்கள் வலிகளை நீக்கி இருக்கின்றனர். எனவே, இக்கால மக்கள் உடல் மற்றும் மன பிரச்சனைக்கு இந்த ரோலரை பயன்படுத்தலாம். அதிக நேரம் நிற்பவர்கள், அதிக தூரம் நடப்பவர்கள், அதிக நேரம் உட்கார்ந்தே இருப்பவர்கள் இந்த கட்டையை பாதத்தில் வைத்து உருட்டி தங்கள் அசதியை போக்கலாம். நோய் வரும் வாய்ப்பையும் தவிர்க்கலாம். உணவு உண்டவுடன் இப்படி பாதத்திற்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது. உண்ட பின்பு; அரை மணிநேரம் கழித்து இம்முறையை பின்பற்றலாம். சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்த நோயாளிகள், தூக்கம் வராதவர்கள், முதியோர்கள் மற்றும் அனைத்து வயதினரும் பயன்படுத்தலாம். பாதங்கள் சிலருக்கு மிகவும் மென்மையாக இருக்கும். அவர்கள் கால்களுக்கு சாக்ஸ் அல்லது மெல்லிய துணி போர்த்தி இந்த அக்குபிரஷர் ரோலரை பயன்படுத்தலாம்.ஆரோக்கியமாக இருப்பவர்களும் இதை பயன்படுத்தி வரும் எதிர்கால பிரச்சனைகளை தடுக்கலாம். கைகளில் வைத்து உருட்டுவதற்கும் இதைப்போல் சிறிய கருவி கிடைக்கிறது. இதுவும் மேற்சொன்ன பலனை தரும். இதை கால்களால் கைகளால் உருட்டுவதால் எந்த பக்க விளைவுகளும் வருவதில்லை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்த பயிற்சி செய்து வருவதால் உடல் மற்றும் மனம் புத்துணர்வு பெறும். இது ஒரு நோய் தடுக்கும் கருவி என்று கூட சொல்லலாம்.’’தொகுப்பு: அ.வின்சென்ட்

You may also like

Leave a Comment

15 − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi