காரிமங்கலம், ஜூன் 25: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடந்து வருகிறது. அதற்கு முன்னதாக, திங்கட்கிழமை தேங்காய் சந்தை நடக்கிறது. நேற்று நடந்த சந்தையில் காரிமங்கலம், காவேரிப்பட்டணம், பாரூர் அரசம்பட்டி, தட்ரஅள்ளி, குடிமேனஅள்ளி, செல்லம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். நேற்று சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதில் அளவைப் பொறுத்து, ₹7 முதல் 12 வரை பல்வேறு ரகங்களில் தேங்காய் விற்பனையானது. சுமார் ₹12 லட்சம் அளவிற்கு வர்த்தகம் நடந்தது. கோயில் திருவிழா மற்றும் மாரியம்மன் பண்டிகை நடந்து வருவதால், தேங்காய் தேவையால், விற்பனை அதிகரித்து காணப்பட்டது.