வேலூர், ஜூன் 23: சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ரேடார் கருவியில் சிக்கிய 9 அதிவேக கார்களுக்கு போக்குவரத்துத்துறையினர் நேற்று அபராதம் விதித்தனர். தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்துத்துறை சார்பில் அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் வேலூர் மண்டல துணை போக்குவரத்து ஆணையர் இளங்கோ உத்தரவின்பேரில், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம் (வேலூர்), ராஜேஷ்கண்ணன் (குடியாத்தம்), சிவக்குமார் (ராணிப்பேட்டை), செங்குட்டுவேல் (அரக்கோணம்), விஜயகுமார் (திருப்பத்தூர்), வெங்கட்ராகவன் (வாணியம்பாடி), அமர்நாத் (ஆம்பூர்) ஆகிய 7 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் வேலூர் மாவட்டம் இறைவன்காடு பகுதியில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்களை ரேடார் கருவி மூலம் கண்காணித்தனர். இதில் அதிவேகமாக இயக்கிய 9 கார்கள் ரேடார் கருவி மூலம் கண்டறியப்பட்டு தலா ₹1,000 வீதம் மொத்தம் ₹9 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் 56 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அதிவேக வாகனங்கள் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மோட்டார் வாகன ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.