ஆலந்தூர்: சென்னை ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி 165வது வட்ட திமுக சார்பில், மக்கள் கிராம சபை கூட்டம் நங்கநல்லூர் ராம் நகரில் நடந்தது. ஆலந்தூர் தெற்கு பகுதி செயலாளர் என்.சந்திரன் தலைமை வகித்தார். அவைத்தலைவர் நாகராஜன் சோழன், துணை செயலாளர்கள் முத்து, மு.சத்யா, பகுதி பொருளாளர் உலகநாதன், மகளிரணி சவுந்தரி முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் கே.ஆர்.ஜெகதீஸ்வரன் வரவேற்று பேசினார். இந்த கூட்டத்தில் திமுக பொருளாளர் டிஆர்.பாலு எம்பி, தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ ஆகியோர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். பின்னர் டிஆர் பாலு பேசியதாவது; எதிர்வரும் தேர்தலில் நீங்கள் ஒரு மாநிலத்தின் விடியலை தரக்கூடிய முதலமைச்சரை தேர்ந்தெடுக்க போகிறோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களது பிரச்னைகளை தீர்த்துவைப்பதற்கு நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவராக கடந்த 2 மாதங்களாக தமிழகம் முழுவதும் சென்று லட்சக்கணக்கில் குவிந்துள்ள மனுக்களை பெற்று தேர்தலை சந்திப்பதற்காக ஒரு மிகப்பெரிய தேர்தல் அறிக்கையை நாங்கள் தயாரிக்க இருக்கிறோம். நாங்கள் போகும் இடமெல்லாம் கிடைக்கும் வரவேற்பை பார்க்கும்போது மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வரப்போகிறார் என்று உறுதிபட கூற முடியும். இவ்வாறு பேசினார். தாமோ. அன்பரசன் எம்எல்ஏ பேசும்போது, ‘அதிமுக ஆட்சியில் நல்லது எதுவும் நடக்கவில்லை. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது இந்த மாவட்டத்தில் மட்டும் 2700 வேலைவாய்ப்பை பெற்று தந்தோம். மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சரானால் உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவார்’ என்றார். இந்த கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் இப்ராகிம், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஜெயராம் மார்த்தாண்டம், ரமேஷ், லியோபிரபாகரன், ஜெயக்குமார், சுதாகர், சுப்புராஜ், சேது செந்தில், வட்ட செயலாளர்கள் கே.நடராஜன், யேசுதாஸ், சாலமன், வெள்ளைச்சாமி, பாண்டி செல்வி, பாரதி, இளைஞரணி கதிரவன், மணிகண்டன், சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்….