வைகை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலப் பணிகள் தாமதம்

திருப்புவனம், ஜூன் 7: திருப்புவனம் அருகே லாடனேந்தல் பெத்தானேந்தல் இடையே வைகை ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ரூ.16.92 கோடி மதிப்பீட்டில் நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 374 மீ நீளம், 9.95 மீ அகலம் 19 தூண்களுடன் அமைய உள்ள உயர்மட்டப் பாலத்திற்கு கடந்த ஜூலை 27ம் தேதி கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

இந்த பாலம் அமைவதால் லாடனேந்தல், பெத்தானேந்தல் கணக்கன்குடி, ஏனாதி, சடங்கி,கருங்குளம், பாப்பாகுடி, திருமாஞ்சோலை உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமமக்கள் பயனடைவார்கள். ஆனால் கடந்த 10 மாதங்களாக பாலத்தின் கட்டுமானப் பணிகள் மந்தகதியில் நடந்து வருகிறது. தற்போது ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லை என்பதால் பணிகளை விரைந்து முடிக்கலாம்.

செப்டம்பர் மாதத்தில் வகை ஆற்றில் தண்ணீர் வரத்து துவங்கி விடும். இதனால் பணிகள் பாதிக்கப்படும். டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிக்க வேண்டும் என்பது ஒப்பந்தமாகும். ஆனால் பாலம் கட்டுமான பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் இன்றி பணிகள் மந்தகதியில் நடக்கிறது என அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். வைகையில் தண்ணீர் வரத்து துவங்குவதற்குள் உயர்மட்ட பால வேலைகளை முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

வத்திராயிருப்பு அருகே திராவிட இயக்க வரலாற்று சாதனைகள் கலை நிகழ்ச்சி

ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

ரூ.2.05 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்