கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 2021-2022 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கவுன்சலிங் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 12 இளநிலை பட்டப்படிப்புகள், 18 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 28 இணைப்பு கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பெறப்பட்டன. சுமார், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்நிலையில், இளம் அறிவியல் பட்டப்படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இதையடுத்து, வரும் 11ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், நிர்வாக காரணங்களால் இளமறிவியல் பட்டப்படிப்பிற்கான கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக முதன்மையர் மற்றும் மாணவர் சேர்க்கை தலைவர் கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்….