கோவை, செப். 30: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான நான்கு நாள் மாபெரும் உழவர் தின விழா கண்காட்சி கடந்த 26-ம் தேதி துவங்கியது. இதனை தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் ஆகியவை இணைந்து நடத்தியது.
கண்காட்சியில், வேளாண் தொடர்பான 300-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதில், தொழில்நுட்ப கருத்தரங்குகள், செயல் விளக்கங்கள், புதிய பயிர் ரகங்கள், பயிர் ஊக்கிகள், பூச்சி நோய் எதிர்ப்பு காரணிகள், அங்கக வேளாண் இடுபொருட்கள், நானோ தொழில்நுட்பங்கள், மதிப்பூட்டல் தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் வேளாண்மை, நீர் பாசன கருவிகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.
இதன் நிறைவு நாள் விழா நேற்று நடந்தது. இதில், பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி தலைமை வகித்தார். சிறந்த அரங்குகள் மற்றும் விழாவிற்கு நிதி உதவி செய்த நிறுவனங்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நான்கு நாள் நிகழ்வில், 32 ஆயிரம் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.