திருவொற்றியூர்: மாதவரம், பொன்னியம்மன்மேடு, சாஸ்திரி நகரை சேர்ந்த கணேஷ் பாபு (48), மாதவரம் 200 அடி சாலை ரெட்டை ஏரி சந்திப்பு அருகே கணேஷ் எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் பெயின்ட் அடிக்க உதவும் பிரஷ் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் அலுவலகத்திற்கு பர்சனல் செகரட்டரி வேலைக்கு பெண்கள் தேவை என கணேஷ் பாபு விளம்பரம் செய்து இருந்தார். அதன்பேரில், செங்குன்றம் பகுதியை சேர்ந்த கலா (25) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பட்டதாரி இளம்பெண் இந்த வேலைக்கு விண்ணப்பித்து இருந்தார். கடந்த 22ம் தேதி அவரை நேர்காணலுக்கு அழைத்தனர். அதன்படி, கலா நேர்காணலுக்கு சென்றபோது, தனி அறையில் அவரை நேர்காணல் செய்த கணேஷ்பாபு, கலாவிடம் ஆபாச வார்த்தைகளை பேசியுள்ளார். மேலும், அவரை வர்ணித்ததுடன், தான் வெளியூர் போகும்போது, அறையில் தன்னுடன் தான் தங்க வேண்டும், என கூறியுள்ளார். உடனே கலா, இந்த வேலை வேண்டாம், என வெளியில் சென்றுள்ளார். அப்போது, கணேஷ் பாபு தரக்குறைவான வார்த்தைகளால் கலாவை திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாதவரம் காவல் நிலையத்தில் கலா புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கணேஷ்பாபு கலாவிடம் ஆபாச வார்த்தை பேசியது உறுதியானது. இதையடுத்து, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். …