சேலம், நவ.17: சேலம் அருகே ஆம்னி வேனில் 500 கிலோ ரேஷன் அரிசியை கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். உணவு பொருள் தடுப்பு பிரிவு போலீசார், ரேஷன் அரிசி கடத்தல் தடுக்கும் வகையில், சேலம் மாவட்டத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காடையாம்பட்டி, சிக்கனம்பட்டி பகுதியில் எஸ்ஐ பெரியசாமி மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து, 500கிலோ ரேஷன் அரிசியையும், வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார், வாகனத்தில் இருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் கெங்கவல்லி ஆணையாம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம்(39), பூபாலன் (35) என்பதும், சிக்கனம்பட்டி பகுதியில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி ஆடு, மாடு வைத்திருப்பவர்களுக்கு அதிக விலைக்கு விற்க கடத்தியதும் தெரியவந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்து சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.