வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதி மீனவர்களின் வலையில் அதிகளவில் மத்தி மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சி அடைந்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வானமாதேவி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள், 65 விசைப் படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்கள் கடந்த ஒரு மாத காலத்திற்கு பிறகு நேற்று வெள்ளப்பள்ளத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மீனவர்களின் வலைகளில் அதிகளவு மத்தி மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இங்கு பிடிக்கப்படும் மீன்கள் ஐஸ் பெட்டிகளில் நிரப்பப்பட்டு கேரளாவுக்கு அதிகளவில் அனுப்பி வைக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 2 டன் முதல் 4 டன் வரை மத்தி மீன்கள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கிலோ ரூ.50 முதல் 75 அதிகபட்சமாக கொள்முதல் செய்வதால், வேதாரண்யம் பகுதியில் இருந்து கேரளாவுக்கு அதிகளவில் அனுப்பி வைக்கப்படுகிறது. நேற்று கடலுக்கு சென்று கரை மீனவர்கள் வலையில் அதிகளவில் மத்தி மீன்கள் கிடைத்து, விலையும் அதிகம் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்….