வேதாரண்யம்,ஜூலை 17: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த நாலுவேதபதி ஆனந்தவள்ளி சமேத அமராபதீஸ்வரர் கோயிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கும், நந்திக்கும் பால், இளநீர், பன்னீர், சந்தனம், மஞ்சள் உட்பட பல்வேறு திரவியங்கள், பழச்சாறுகள், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு சுவாமி, நந்தியும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.
முன்னதாக சனி பிரதோஷத்தை முன்னிட்டு புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு கோவில் சிவாச்சாரியார் ஆனந்த சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு பின்பு புனித நீர் அடங்கல் எடுத்து வரப்பெற்று சுவாமிக்கும், நந்திக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. சனி பிரதோஷ விழாவில் பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர். பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.