வேக தடையில் வேகமாக ஏறி இறங்கியபோது பஸ்சில் இருந்த பயணி தூக்கி வீசப்பட்டு பலி

 

விருத்தாசலம், அக். 23: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பூட்டை ரோட்டை சேர்ந்தவர் முனுசாமி மகன் சுப்ரமணியன்(55), டெய்லர். இவர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கோழியூர் கிராமத்தில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக நேற்று முன்தினம் பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.கள்ளக்குறிச்சியில் இருந்து விருத்தாசலம் பேருந்து நிலையம் வந்திறங்கி, விருத்தாசலத்தில் இருந்து திட்டக்குடி நோக்கி சென்ற தனியார் பேருந்தில் பயணம் செய்தார்.

அதிவேகமாக சென்ற பேருந்து, கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள சத்தியவாடி பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த வேகத்தடையில் ஏறி இறங்கியது. இதில், பேருந்தின் பின்புற சீட்டில் அமர்ந்திருந்த சுப்பிரமணியன், சீட்டில் இருந்து தூக்கி வீசப்பட்டு பேருந்தின் மேற்கூரையில் அவரது தலைப்பகுதி மோதியதில் பலத்த காயமடைந்தார். பேருந்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு பெண்ணாடம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ராஜபாளையம் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

முட்புதர்களாக காட்சியளிக்கும் அர்ச்சுனா ஆற்றை தூர்வார வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

வெம்பக்கோட்டை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்