கோவை, பிப்.8: கோவை பீளமேடு நம்பூரார் வீதியை சேர்ந்தவர் அருணா (42). கல்லூரி பேராசிரியர். இவர் வெளிநாட்டில் மேல் படிப்பு படிக்க ஆசைப்பட்டார். இதற்காக மேட்டுப்பாளையம் ரோடு பகுதியில் உள்ள ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தை அணுகினார். அந்த நிறுவனத்தின் நிர்வாகியான டிவிஎஸ் நகரை சேர்ந்த ராஜ்குமார் (39), புவனேஸ்வரி ஆகியோர் 7.33 லட்ச ரூபாய் தந்தால் சிங்கப்பூரில் பிரபலமான கல்வி நிறுவனத்தில் படிப்பில் சேர ஏற்பாடு செய்வதாக கூறினர்.
மேலும் அந்த தொகையை அருணா செலுத்தினார். ஆனால் அவர்கள் வெளிநாடு அனுப்ப முன்வரவில்லை. இந்த நிலையில் அவர்கள் 3.50 லட்ச ரூபாய் திருப்பி தந்தனர். மேலும் 3.883 லட்ச ரூபாய் தராமல் மோசடி செய்துவிட்டனர். அருணா இது தொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் தந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.