ஸ்ரீபெரும்புதுார்: சுங்குவார்சத்திரம் அருகே வீட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (37). இவர், வேன் ஓட்டுனர். இவரது மனைவி ஆனந்தி (30). இந்நிலையில், நேற்று காலை சுரேஷ் வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார், ஆனந்தி அதே பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை பணிக்கு சென்றிருந்தார். இந்நிலையில், ஆனந்தி மாலை பணி முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பிரேவில் இருந்த 18 சவரன் நகை, ரூ.2 லட்சம் பணம், 500 கிராம் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற சுங்குவார்சத்திரம் போலீசார் தடயங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர். ஆனந்தி தனது கணவருக்கு மினி லோடு வேன் வாங்கி கொடுப்பதற்காக மகளிர் சுய உதவிக்குழுவிடம் இருந்து ரூ.2 லட்சம் கடன் வாங்கி வீட்டில் வைத்துள்ளார். அந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது….