சூளகிரி, ஜூலை 29: சூளகிரி அருகே வீட்டின் கழிவறையில், 12கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபர் உள்பட 2பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே ராமச்சந்திரன் கிராமத்தில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக, அட்கோ போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சபரிவேலனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், நேற்று முன்தினம் மாலை, சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது, கணேஷ்(38), என்பவர் வீட்டின் அருகேயுள்ள கழிவறையில், 12 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து, ராமச்சந்திரன் நகர் பேரிகை போலீஸ் ஸ்டேஷனுக்கு வருவதால், கணேஷை அங்கு ஒப்படைத்தனர். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய கொத்தூரை சேர்ந்த பட்டாபிராமன்(49) என்பவரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ராமச்சந்திரன் கிராமத்தில் தனது மனைவியுடன் வசித்து வருவதாகவும், கதிரேபள்ளி கிராமத்தில் சலூன் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். கதிரே பள்ளியை சேர்ந்த மஞ்சு என்பவரிடம் கணேசுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. மஞ்சு ஏற்கனவே கஞ்சா தொழில் செய்து வந்துள்ளார்.
ஆந்திரா மாநிலம் விஜயவாடா அருகேயுள்ள அண்ண வர்மா பகுதிக்கு சென்று, ₹10ஆயிரத்திற்கு 2கிலோ கஞ்சா வாங்கி வந்து, மஞ்சு சொல்கின்ற ஆட்களுக்கு 2கிலோ கஞ்சாவை ₹20ஆயிரத்திற்கு கடந்த 6மாதமாக விற்பனை செய்து வந்துள்ளார்.