கிருஷ்ணகிரி, டிச.12: பர்கூர் அருகே உள்ள வி.ஆர்.பி மாதேப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மாதையன்(53), விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம், காவேரிப்பட்டணம் அடுத்துள்ள பையூரில் உள்ளது. அதே பகுதியில் சேட்டு, பாரதி ஆகியோரின் விவசாய நிலமும் உள்ளது. இவர்களுக்கு இடையே எல்லைப் பிரச்னை இருந்து வந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு, மாதையன் மாவட்ட சர்வேயர் மூலம், தனது நிலத்தை அளந்து எல்லை கற்களை நட்டு வைத்தார்.
கடந்த 6ம்தேதி, நிலத்தை பார்க்க சென்ற போது, எல்லை கற்கள் பிடுங்கி வீசப்பட்டிருந்தது. இதுகுறித்து மாதையன், சேட்டு மற்றும் பாரதியிடம் தட்டிக்கேட்ட போது, அவர்கள் மாதையனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், காவேரிப்பட்டணம் போலீசார் சேட்டு, பாரதி ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.