விழுப்புரம், ஜன. 26: விழுப்புரத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்டனர். இதில் மாணவர் சிலர் கஞ்சா போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மோதலை தடுக்கச் சென்ற போலீசாரையும் கண்டு கொள்ளாமல் அவர்கள் முன்னிலையில் தாக்கிகொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மோதல் குறித்து, அரசு பள்ளி மாணவன் அபில் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சதீஷ் உள்ளிட்டவர்களிடம் வாட்சில் டைம் கேட்ட போது தகராறு ஏற்பட்டு சதீஷ் மற்றும் அவர்களுடன் இருந்த அஜய், அடையாளம் தெரியாத நபர் சேர்ந்து இரும்பு ராடால் தாக்கியதாக தெரிவித்தார். அதன் போரில் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே மாணவர்களின் மோதலை தடுக்க சென்ற பெண் போலீஸ் எட்டு நிஷாந்தியை பணி செய்ய விடாமல் நெட்டி தள்ளியும், பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக அருந்ததியர் தெரு பிரதீப்குமார்(25). ஜிஆர்பி தெரு கல்லூரிமாணவர் ஜீவா(19). ஆகிய இருவர் மீதும் மேற்கு காவல் நிலைய போலீசார் தனியாக வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.