விழுப்புரம், அக். 1: விழுப்புரம் அருகே முத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர், அதே வடக்கு தெருவை சேர்ந்த கண்ணன் என்பவரிடம் தனது மகன் கவுதம் (எ) மணிகண்டன் (27) என்பவருக்கு திருமண வரன் பார்த்து கொடுக்குமாறு கடந்த ஓராண்டுக்கு முன் கூறியிருந்தாராம். பல இடங்களில் தேடிப்பார்த்து கடைசியில் ஒரு வழியாக வரன் பார்த்து வைத்து 4 மாதத்துக்கு முன் திருமணம் நடந்துள்ளது.
இதனிடையே திருமணமான சில மாதங்களிலேயே கவுதமுக்கும், அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. பின்னர் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வருவதாக தெரிகிறது. திருமணமான 4 மாதத்திலேயே விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு சென்றதால் மன உளைச்சலிலும், ஆத்திரத்திலும் கவுதம் இருந்தாராம். இந்நிலையில் நேற்று முன்தினம் கண்ணனை பார்த்த கவுதம் உன்னால்தான் அந்த பெண்ணை திருமணம் செய்து எனக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்று கூறி கண்ணனை அசிங்கமாக திட்டி, செருப்பால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளாராம். இதுகுறித்து கண்ணன் அளித்த புகாரின் பேரில் கவுதம் (எ) மணிகண்டன் மீது விழுப்புரம் நகர காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.