விளாத்திகுளத்தில் மாயமான பள்ளி மாணவிகள் 4 பேர் மீட்பு

விளாத்திகுளம், செப். 17: விளாத்திகுளத்தில் பள்ளிக்கு காலையில் புறப்பட்டு சென்ற மாணவிகள் 4 பேர் திடீரென மாயமான நிலையில், தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி 8 மணி நேரத்தில் மாணவிகளை பத்திரமாக மீட்டனர். விளாத்திகுளம் போலீஸ் லைன் தெருவை சேர்ந்த 4 சிறுமிகள், இதே பகுதியில் உள்ள பள்ளியில் பயின்று வருகின்றனர். நேற்று காலையில் வழக்கம்போல் பள்ளிக்குச் செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றனர். இந்நிலையில் மாணவிகள் பள்ளிக்கு வராததால், ஆசிரியர்கள் பெற்றோரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், விளாத்திகுளம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து தீவிரமாக தேடினர்.

விளாத்திகுளம் பேருந்து நிலையம் மற்றும் பிரதான சாலைகளில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி மாலை 5 மணியளவில் வைப்பாறு ஆற்றுப்பாலம் அருகே மாணவிகள் 4 பேரையும் பத்திரமாக மீட்டனர். அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். பின்னர் அறிவுரை வழங்கி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி