காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் கீரை மண்டபம் அருகே அமைந்துள்ளது விளக்கொளிப் பெருமாள் கோயில் மற்றும் தூப்புல் வேதாந்த தேசிகர் திருக்கோயில். இக்கோயில் ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பெற்ற 108 வைணவத் திருக்கோயில்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது.
பிரம்மா யாகம் செய்தபோது ஏற்பட்ட இருளை நீக்கிடவும், யாகத்தை இடையூறு இல்லாமல் நடத்தவும் பிரம்மன் பெருமாளை சரணடைந்தார். அந்த நேரத்தில் பெருமாள் விளக்கொளியாய் அவதரித்து யாகம் சிறப்பாக நடைபெற உதவி செய்ததால் இப்பெருமாளுக்கு விளக்கொளிப் பெருமாள் என்றும் தீபப்பிரகாசர் என்றும் பெயர் உண்டானது. இக்கோயில் கொடிமரம் உட்பட ஆலயம் முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 4ம் தேதி தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக 5வது நாளாக யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று மகா பூரணாகுதி தீபாராதனைக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. மகா கும்பாபிஷேக ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் பூவழகி, பட்டாச்சாரர்கள் விழா குழுவினர், உபயதாரர்கள், கோயில் பணியாளர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.