விராலிமலை: அறுவடைக் காலம் முடிந்து நடத்தப்படும் மீன் திருவிழா விராலிமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் மூன்று இடங்களில் நேற்று நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சுற்றுப்பகுதிகளில் நடைபெறும் மீன்பிடி திருவிழா அப்பகுதியின் சிறப்பாகும். மழை காலங்களில் குளங்களில் நிரம்பும் நீரில் அந்தந்த பகுதி குளத்தின் ஆயகட்டுதாரர்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகிகள் மீன் குஞ்சுகளை வாங்கி குளத்தில் விடுவதும், நீர் வற்றியவுடன் அந்த குஞ்சுகள் பெரிய மீன்களாக மாறியதும் ஊர் பொதுமக்களை பிடித்துக்கொள்ள அனுமதிப்பது பாரம்பரிய மிக்க மீன்பிடி திருவிழாவின் நோக்கமாகும். இதுபோல் விராலிமலை தென்னங்குடி, கத்தலூர் மருதங்குளம், தேராவூர் மேட்டுப்பட்டி குளங்களில் நேற்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வலை, கச்சா உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் குளத்திற்குள் இறங்கி மீன்பிடித்தனர். நாட்டு வகை மீன்களான விரால், கெண்டை, கெளுத்தி, குறவை உள்ளிட்ட மீன்களை மகிழ்ச்சியுடன் பிடித்துச் சென்றனர்.இதுபோல நடத்தப்படும் மீன்பிடி திருவிழாவின் முக்கிய நோக்கமாக கருதப்படுவது அனைத்து மதத்தினரும் ஜாதி மத பேதமின்றி மத நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக சமத்துவம் சகோதரத்துவத்துடன் குளத்தில் இறங்கி மீன்பிடிப்பதை மக்கள் அனைவரும் சமம் என்பதை பறைசாற்றுவதாக கூறப்படுகிறது….