திருப்பரங்குன்றம், செப். 20: மதுரை, மாடக்குளம் பகுதியில் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில், அரசு முதுகலை பட்டதாரி மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இதில் கல்லூரி மாணவர்கள் 60 பேர் தங்கியுள்ளனர். இந்த விடுதியில் வார்டனாக பணிபுரிந்த சங்கரசபாபதி, சில தவறான கருத்துக்களை பொது வெளியில் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநர் ஆனந்த் விசாரணை நடத்தி, வார்டன் சங்கர சபாபதியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனை கண்டித்தும், வார்டனுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரியும் மாடக்குளம் விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து விடுதி வளாகத்தினுள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.