பழநி, அக்.21: பழநி நகரில் வாடகை செலுத்தாதவர்களின் கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலிமனைவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றில் நிலுவை மற்றும் நடப்பாண்டிற்கான கேட்பு தொகையை நகராட்சி அலுவலகத்தில் உடனடியாக செலுத்தி அதற்கான ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.
வரி செலுத்த தவறினால் கட்டிடங்களில் உள்ள அசையும் பொருட்களை ஜப்தி செய்தல், நீதிமன்றத்தில் வழக்கு தொடருதல், குடிநீர் குழாய் இணைப்புகளை துண்டிப்பு செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நகராட்சி கடைகளுக்கான மாத வாடகையை நடப்பு மாதம் வரை நிலுவையின்றி செலுத்தி கடையை பூட்டி சீல் வைத்தல் போன்ற நடவடிக்கையை தவிர்த்து கொள்ள வேண்டுமென நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.