தண்டையார்பேட்டை: ராயபுரத்தில் வாகன சோதனையின் போது போதை ஆசாமிகள் ஓட்டி வந்த பைக் மற்றும் ஆட்டோ மோதியதில் காவலரின் கால் முறிந்தது. இதுதொடர்பாக, ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.ராயபுரம் மன்னார் சாமி கோயில் தெருவில் நேற்று முன்தினம் இரவு போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சிவா மற்றும் முதல்நிலை காவலர் வரதராஜன் ஆகியோர் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது, மும்பை பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனத்தில் 4 பேர் குடிபோதையில் வந்தனர். அவர்களை பிடிக்க சென்றபோது போக்குவரத்து காவலர் வரதராஜன் மீது மோதி விட்டு நான்கு பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதில் நிலைதடுமாறிய வரதராஜன் ரோட்டில் விழுந்தார். அப்போது, பின்னால் வந்த ஒரு ஆட்டோவும் மோதியதில் வரதராஜனுக்கு வலது கால் எலும்பு முறிந்தது. வலியால் துடித்த அவரை உடனடியாக மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றதால் மேல் சிகிச்சைக்காக ராயபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இதுகுறித்து தகவல் அறிந்த வடக்கு காவல் மாவட்ட போக்குவரத்து துணை ஆணையர் ஹர்ஷ சிங் வரதராஜனின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் காசிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பிறகு திருவொற்றியூர் சண்முகம் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகன் (43) மீது வழக்கு பதிவு செய்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர். குடித்துவிட்டு பைக்கில் வந்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், நேற்று வாகன சோதனையின்போது போக்குவரத்து போலீசாருடன் காசிமேடு, ராயபுரம் ஆகிய பகுதிகளில் சட்டம் -ஒழுங்கு போலீசாரும் கூடுதலாக பணி அமர்த்தப்பட்டனர்….
வாகன சோதனையின்போது பைக், ஆட்டோ மோதி காவலர் கால் முறிந்தது: போதை ஆசாமிகளுக்கு வலை
previous post