சங்ககிரி, : சங்ககிரி ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாப்பில் அடையாளம் தெரியாத கனரக வாகனம் பாலத்தை கடக்க முயன்றபோது மோதியதில் இரும்பு தடுப்பு சாலையில் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சங்ககிரி -திருச்செங்கோடு செல்லும் சாலையில் ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாப்பில் ரயில்வே பாலம் உள்ளது. அதன் வழியாக, தினமும், பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் வாகனங்கள், பஸ், கார், டேங்கர் லாரி உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அந்த பாலத்தின் வழியாக கனரக வானங்கள் செல்வதை தவிர்க்கும் வகையில் குறிப்பட்ட உயரத்திற்கு இரும்பால் ஆன தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு சில வாகன ஓட்டிகள் அதிக பாரத்துடன் சென்று, தடுப்பில் சிக்கிக் கொள்கின்றனர். நேற்று முன்தினம் இரவு, அதிக உயரம் கொண்ட அடையாளம் தெரியாத கனரக வாகனம் ஒன்று பாலத்தில் செல்ல முயன்றபோது இரும்பு தடுப்பு மீது மோதியதில் கான்கிரீட் பிடிமானம் உடைந்து சாய்ந்தவாறு உள்ளது. இரவு நேரம் என்பதால் விபரீதம் ஏதும் ஏற்படவில்லை.இந்நிலையில், நேற்று காலை முதல் மதியம் 2 மணி வரை ரயில்வே நிர்வாகம் பொக்லைன் இயந்திரம் கொண்டு இரும்புத் தடுப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால், அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து சங்ககிரி போலீசார் விசாரித்து வருகின்றனர். அடிக்கடி உயரமான கனரக வாகனங்களால் இந்த இரும்புத் தடுப்பு பெயர்ந்து விடுகிறது. இதற்கு ரயில்வே நிர்வாகம் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….