நெல்லை, ஏப். 6: வள்ளியூர் அருகே மினி லோடு ஆட்டோ வாகனத்தில் மூடைகளில் கடத்திவரப்பட்ட 480 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடையவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கலா, எஸ்ஐ கார்த்திகேயன் மற்றும் போலீசார் பணகுடி-கும்பிளம்பாடு சாலையில் ரெங்கநாதபுரம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த மினி லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 480 கிலோ ரேஷன் அரிசி மூடைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியுடன் மினி லோடு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து வள்ளியூர் அருகேயுள்ள கும்பிளம்பாடுவைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவரை தேடி வருகின்றனர்.