திருப்பூர், ஜூன் 28: திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தடையில்லாமல் குடிநீர் வழங்கக்கூடிய வகையில் 4வது குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. விடுபட்ட பகுதிகளுக்கான பாதாள சாக்கடை திட்டம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இது மட்டுமல்லாது சாலை பணிகள், கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால், தெருவிளக்கு அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பணிகளின் நிலை குறித்து ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் மேயர் தினேஷ்குமார் தலைமையில், கமிஷனர் பவன்குமார் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மேயர் தினேஷ்குமார் வலியுறுத்தினார். இக்கூட்டத்தில் துணை மேயர் பாலசுப்ரமணியம், மண்டல தலைவர்கள் உமா மகேஸ்வரி, கோவிந்தராஜ், கோவிந்தசாமி, தலைமை பொறியாளர் திருமாவளவன், துணை ஆணையாளர்கள் சுந்தர்ராஜ், சுல்தானா உள்ளிட்ட அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டிருந்தனர்.