வலங்கைமான், ஜன. 21: வலங்கைமான் அடுத்த கோவிந்தகுடி நெடுவாசல் பகுதியில் 10 ஆண்டுக்கு பிறகு வீட்டிற்கு வந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வலங்கைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த கோவிந்தகுடி நெடுவாசல் குடியானத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (40). இவருக்கு திருமணம் ஆகவில்லை. செல்வம் கடந்த 15 ஆண்டுகளாக திருப்பூரில் வேலை செய்து வந்தார்.
இருப்பினும் கடந்த 10 ஆண்டுகளாக கோவிந்தகுடி நெடுவாசல் உள்ள தனது வீட்டிற்கு வரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு வந்த செல்வம் அதிக மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை வீட்டின் பின்புறம் இருந்த மரத்தில் செல்வம் தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச் சம்பவம் குறித்து வலங்கைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் செல்வத்தின் உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊருக்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.