வலங்கைமான் : வலங்கைமான் அரசு பள்ளியில் பழுதடைந்த வகுப்பறை கட்டிடம் தமிழக அரசின் உத்தரவிற்கிணங்க இடித்து அகற்றப்பட்டது.வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இரண்டு வகுப்பறைகளுடன் கூடிய கட்டிடம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இக் கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்து வந்தது. இந்நிலையில் நெல்லையில் கடந்த 17ம் தேதி பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிர் இழந்தனர் இதனையொட்டி தமிழக அரசு தமிழகம் முழுவதும் பள்ளிகளை ஆய்வு செய்து பழுதடைந்த கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதையடுத்து வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பழுதடைந்த வகுப்பறை கட்டிடம் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. இப்பணியினை தலைமை ஆசிரியர் பரிமளம், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மாணிக்கவாசகம் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் இப்பள்ளியில் உள்ள பழுதடைந்த நிலையில் உள்ள கழிவறை, ஆய்வகம் மற்றும் சமையல் கூட கட்டிடங்களை இடிக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தெரிவித்தார்….