வருசநாடு: கடமலை-மயிலை ஒன்றியத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வசித்து வரும் மலைக்கிராம பொதுமக்கள் விவசாய பணிகளில் ஈடுபடகூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவை எதிர்த்து விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் நேற்று வருசநாடு அருகே கோரையூத்து கிராம பொதுமக்கள் வனத்துறையினரின் தடையை மீறி விவசாய நிலங்களில் உழவு செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். இதனையறிந்த கண்டமனூர் வனச்சரகர் ஆறுமுகம் மற்றும் வனத்துறையினர் பொதுமக்களிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 2 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனையடுத்து மேகமலை உதவி வனப்பாதுகாவலர் ரவி கோரையூத்து கிராமத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை மலைக்கிராம பொதுமக்கள் யாரும் விவசாய பணிகளில் ஈடுபட கூடாது. மீறினால் நீதிமன்ற வழிகாட்டுதலின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து தங்களின் வீடுகளுக்கு சென்றனர்….