வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே செக்போஸ்ட்டில் போலீஸ்காரர்களை தாக்கிய போதை வாலிபர்கள் 3 பேர் கைதாயினர். 3 பேரை தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே விருவீடுவில் போலீஸ் சோதனைச்சாவடி உள்ளது. இங்கு கடந்த ஜூன் 23ம் தேதி போலீசார் மேகநாதன், சீராளன் பணியில் இருந்தனர். அப்போது முத்துமாணிக்கம் (27), காளிதாஸ் (29), ரஞ்சித் (27) உள்பட 6 பேர் 3 டூவீலர்களில் மதுபோதையில் வந்தனர். சோதனைச்சாவடி அருகே வந்தபோது முத்துமாணிக்கம் ஓட்டி வந்த டூவீலர் பேரிகார்டில் மோதியது. இதில் டூவீலர் கவிழ்ந்து கீழே விழுந்த முத்துமாணிக்கம் உள்பட 2 பேரை, போலீஸ்காரர் மேகநாதன் தூக்கி விட்டு அறிவுரை கூறினார். அப்போது பின்னால் வந்த மற்ற 4 பேரும் முத்துமாணிக்கத்தை தாக்கியதாக கூறி அங்கு கீழே கிடந்த தென்னை மட்டை, உருட்டுக்கட்டை போன்றவற்றால் மேகநாதனை சரமாரியாக தாக்கினர். தடுக்க வந்த சீராளனுக்கும் அடி விழுந்தது. பின்னர் போலீசார், முத்துமாணிக்கம், காளிதாஸ், ரஞ்சித் ஆகியோரை கைது செய்தார். 3 பேரையும் நிலக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெரியகுளம் சிறையில் அடைத்தனர். காயமடைந்த மேகநாதன் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதலில் தலைமறைவான 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். போலீசாரை தாக்கிய இச்சம்பவம் தொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….