சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புதுவண்ணாரப்பேட்டை இருசப்பன் தெருவை சேர்ந்த பிரதீப்குமார் நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் சுயதொழில் செய்ய முடிவு செய்து, கடந்த 2015ம் ஆண்டு திருவொற்றியூரை சேர்ந்த தொழிலதிபர் ரத்தினம் என்பவரிடம் கடன் கேட்டேன். அவர், எங்கள் பெயரில் உள்ள 1,584 சதுர அடி சொத்தை ராயபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அடமான பத்திரம் மூலம் ரூ100க்கு ரூ2.50 பைசா வட்டிக்கு ரூ10 லட்சம் கடன் கொடுத்தார். இந்த கடனை நான், எனது தந்தை ஆகியோர் வங்கியில் பர்சனல் லோன் மற்றம் உறவினர்களிடம் கடன் பற்று அடமான பத்திரத்தில் உள்ளப்படி அசல் தொகையுடன் ரூ18 லட்சத்தை கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்தினத்திடம் கொடுத்து கடனை முடித்துவிட்டோம். அதன் பிறகு நாங்கள் கொடுத்த சொத்தின் அடமான பத்திரத்தை ரத்து செய்து கொடுக்குமாறு ரத்தினத்திடம் கேட்டபோது, ரூ100க்கு ரூ5 வட்டிக்கு தான் நான் பணம் கொடுத்துள்ளேன். அதன்படி இன்னும் நீங்கள் ரூ15 லட்சம் தரவேண்டும். இல்லை என்றால் என் விருப்பப்படி சொத்தை விற்பனை செய்துவிடுவேன் என மிரட்டி வந்தார். அடமான பத்திரத்தில் ரூ100க்கு ரூ2.50 பைசா என பதிவு செய்து கொடுத்துவிட்டு, கூடுதல் பணம் கேட்டு மிரட்டுகிறார். எனவே ரூ10 லட்சம் கடனுக்கு ரூ18 லட்சம் பணம் செலுத்தியும் இன்னும் ரூ15 லட்சம் கேட்டு மிரட்டும் ரத்தினம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்….