ராமேஸ்வரம், ஜன.9: தங்கச்சிமடம் மீனவ கிராமத்தில் கடல்வாழ் உயிரின கண்காட்சி நடைபெற்றது. ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் தண்ணீர் ஊற்று மீனவ கிராமத்தில் நேற்று முன்தினம் கிராம முதன்மை கூட்டுறவு மற்றும் தக்ஷிண் அறக்கட்டளை இனைந்து பாரம்பரிய மீனவர்களின் வாழ்வியலும், அழிவுறும் நிலையில் கடல்வாழ் உயிரினங்கள் என்கிற தலைப்பில் கண்காட்சி நடைபெற்றது. கிராம செயலாளர் அந்தோணி ராஜ் தலைமை வகித்தார். அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் நைனா உதயசங்கர் முன்னிலை வைத்தார்.
கண்காட்சியில் கடல் வளத்தை பாதுகாக்கும் பாரம்பரிய மீன்பிடி முறை மற்றும் அழியும் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பது குறித்த பட விளக்கங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனை மீன்வளத்துறை உதவி இயக்குநர் அப்துல் காதர் ஜெய்லானி பார்வையிட்டு சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து ஓவிய போட்டியில் கலந்து கொண்ட மீனவ சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் கிராம மக்கள், மீனவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.