ராமநாதபுரம்,செப்.30: ராமநாதபுரம் அரண்மனை வீதியில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். ராமநாதபுரம் அரண்மனை வீதியில் காய்கறி, பழக்கடைகள், பலச்சரக்கு கடைகள், பூக்கடைகள், உணவகங்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள், சூப்பர் மார்க்கெட் போன்ற வணிக நிறுவனங்கள், செல், எலக்ட்ரானிக் கடைகள் என அனைத்து விதமான கடைகள் இருப்பதால் முக்கிய வணிக பகுதியாக உள்ளது.
இதுபோன்று சேதுபதி மன்னர்களின் அரண்மனை, தொல்லியல் துறையின் ராமலிங்கவிலாசம் அருங்காட்சியகம் போன்றவை இருப்பதால் சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்கின்றனர். மேலும் அனைத்து கட்சியினர் பொதுக்கூட்டங்கள், அரசு உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என அனைத்து விதமான நிகழ்ச்சிகள் நடக்கக் கூடிய இடமாக உள்ளது. குறிப்பாக ராமநாதபுரம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பல்வேறு கிராமமக்கள் வந்து செல்வதால் டவுன் பஸ்கள் வந்து செல்கிறது.
இந்நிலையில் அரண்மனை முதல் அருகிலுள்ள கோட்டை விநாயகர் கோயில், சர்ச் பகுதி, கேணிக்கரை விலக்கு, மீன் மார்க்கெட் பகுதி, வண்டிகார தெரு வரை என முக்கிய இடங்கள் வரை சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்துவதால் மற்ற வாகனங்கள் செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே அரண்மனை வீதி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய் துறையினர் அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.