தர்மபுரி, ஆக.4: தர்மபுரி மாவட்டத்தில் மகன், மகள்களை ராணுவ பணிக்கு அனுப்பியுள்ள பெற்றோர்களுக்கு ஊக்க மானியம் வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தங்களது குடும்பத்தில் ஒரே மகனை ராணுவப் பணிக்கு அனுப்பி வைத்திருந்தால் (உடன் பிறந்த ஆண், பெண் பிள்ளைகள் இருத்தல் கூடாது) ₹20 ஆயிரம் மற்றும் வெள்ளி பதக்கமும், ஒரு குடும்பத்தில் 2 அல்லது இரண்டிற்கு மேற்பட்ட மகன், மகள்களை ராணுவப்பணிக்கு அனுப்பி வைத்திருந்தால் ₹25 ஆயிரம் மற்றும் வெள்ளி பதக்கமாக இப்பெற்றோர்களுக்கு வழங்கும் பொருட்டு, போர்பணி ஊக்கமானியமாக தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, குடும்பத்தில் ஒரே மகன், மகள் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட மகன், மகள்களை அனுப்பியுள்ள தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பெற்றோர்கள் அனைவரும், மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை அணுகி, உரிய படிவத்தினை பெற்று பயனடையலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.