சென்னை: தெற்கு ரயில்வேயில் இலவசமாக வழங்கப்படும் வைபை வசதியை 30 நிமிடத்துக்கு மேல் பயன்படுத்த மாதம் ரூ.75 கட்டணம் செலுத்தலாம் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: இந்தியன் ரயில்வே, பயணிகளின் வசதிகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு இணையதளம் வசதிகளை வை-பை தொழில் நுட்பம் மூலம் வழங்குவதில் இந்தியன் ரயில்வே முன்னோக்கி செல்கிறது. அதன்படி தெற்கு ரயில்வேயில் 5,087 கி.மீ வழிதடங்களை சுற்றியுள்ள 543 ரயில் நிலையங்களில் அதிவேக வை-பை இணையதள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கோட்டத்தில் 135 ரயில் நிலையத்திலும், திருச்சி கோட்டத்தில் 105 ரயில் நிலையத்திலும், சேலம் கோட்டத்தில் 79 ரயில் நிலையத்திலும், மதுரை கோட்டத்தில் 95 ரயில் நிலையத்திலும், பாலக்காடு கோட்டத்தில் 59 ரயில் நிலையத்திலும், திருவனந்தபுரம் கோட்டத்தில் 70 ரயில் நிலையத்திலும் வை-பை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் ஒரு எம்.பி.பி.எஸ் வேகத்தில் முதல் 30 நிமிடத்துக்கு மட்டும் வை-பையை இலவசமாக உபயோகப்படுத்திக் கொள்ளலாம். 30 நிமிடத்துக்கு மேல் உபயோகப்படுத்தவும், இணையதள வேகத்தை அதிகப்படுத்தவும், பயனர் அதற்கான கட்டண திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். அதன்படி நாள் ஒன்றுக்கு ரூ.10 கட்டணம் (34 எம்.பி.பி.எஸ் வேகத்தில் 5 ஜி.பி வரை) முதல் 30 நாள் வரை ரூ.75 கட்டணம் (60 ஜி.பி 34 எம்.பி.பி.எஸ்) செலுத்தி ஜி.எஸ்.டி தவிர்த்து கட்டண விருப்பங்களுக்கு ஏற்ப திட்டத்தைப் பயன்படுத்தி கொள்ளலாம்….