ஈரோடு, மார்ச். 11: ஈரோடு ரயில்வே காலனி குடியிருப்பை சேர்ந்தவர் ஆறுமுகம் (40). இவர் ரயில்வே டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார். ஆறுமுகத்தின் மனைவி குடும்ப பிரச்னை காரணமாக திருச்சியில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் ஆறுமுகமும் கடந்த வாரம் திருச்சிக்கு சென்றுவிட்டு நேற்று இரவு மீண்டும் வீட்டுக்கு வந்தார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, வீட்டினுள் சென்று பார்த்தார். அப்போது, பீரோ திறக்கப்பட்டு, பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும், பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நாணயங்களை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து ஆறுமுகம் ஈரோடு தெற்கு போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து, வழக்குப்பதிந்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபரை தேடி வருகின்றனர்.